Friday, October 12, 2012

2012- சமீப நிகழ்வுகள் - ஜூலை 25 முதல் 29 வரை



13வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்பு
நாட்டின் 13வது குடியரசு தலைவராக ஜூலை 25ஆம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜி அவர்கள் காலை 11.35 மணிக்கு கடவுளின் பெயரால் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு பதவியேற்பு பதிவேட்டில் கையெழுத்திட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரோஷ் ஹோமி கபாடியா அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் திரு. மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் திரு. சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிரதிபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவை தலைவர் திரு. மீரா குமார், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

குடியரசு தலைவர் உரை
- பதவியேற்றதும் ஜனாதிபதி முகர்ஜி அவர்கள் உரையாற்றியதாவது, அரசியில் சட்டத்தில் பாதுகாவலனாக செயல்படுவதுதான் குடியரசுத் தலைவரின் முதல் கடமை. நாட்டின் நலனுக்காக சேவையாற்றுதல் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் பாரபட்சமில்லாமல் நடுநிலையில் செயல்படுவேன். நாட்டின் வளர்ச்சி உண்மையானதாக இருக்க வேண்டும் என்றால், வளரும் இந்தியாவில் ஒரு அங்கமாக நாமும் இருக்க வேண்டும். வறுமை என்ற கொடுமையை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. நவீன இந்தியாவின் அகராதியில் இருந்து வறுமை என்ற சொல்லை அகற்ற வேண்டும். ஊழல் என்பது ஒரு பேய். நாட்டின் வளர்ச்சியை அது கெடுத்துவிடும். சில பேராசைக்காரர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தீவிரவாதத்திற்கு எதிரான 4வது உலகப்போர் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

அரசியலில் பிரணாப்
- 1).1969ல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். 2).1978ல் கங்கிரஸ் பொருளாளராக பதவி வகித்தார். 3). 1980-85ல் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 4).கருத்து வேறுபாடு காரணமாக 1986ல் ராஷ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சி தொடங்கினார். 5).1989ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கட்சியை இணைத்தார். 6).1991-96 வரை திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தார். 7).இந்திராகாந்தி அமைச்சரவையில் வருவாய்த்துறை இணை அமைச்சரானார். 1982-84ல் நிதியமைச்சராக பதவி வகித்தார் (இந்த காலத்தில் மன்மோகன்சிங் அவர்கள் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார்). 8). 1996க்குப் பிறகு 2004ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. 2004, 2009 மக்களவை தேர்தலில் மேற்குவங்களாத்தில் உள்ள ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக மக்களவை உறுப்பினரானார். 2004ல் பாதுகாப்பு அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும், 2008ல் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். 9).ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். 10). பல்வேறு துறை தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட 33 அமைச்சரவை குழுவுக்கு தலைமை வகித்தவர். 11). 1997ல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது பெற்றார். 12).மிக உயரிய விருதான பத்மவிபூஷண் விருது பெற்றவர்.

தமிழகத்தில் புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

நாட்டின் தேசிய வனவிலங்கான புலிகள் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், புலிகள் சரணாலயம் உள்ள இடங்களில் உள்ள கடைகள், கட்டடங்கள் உள்ளிட்ட வர்த்தகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வனவிலங்கு ஆர்வலர் அஜய்துபே அவர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான உச்சநீதிமன்றம் புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள களக்காடு, முண்டந்துறை (நெல்லை), ஆனைமலை (திருப்பூர், கோவை), முதுமலை (நீலகிரி) உள்ளிட்ட புலிகள் சரணாலயங்கள் ஜூலை 25 முதல் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. (ஜூலை 25)

கபில்தேவிற்கு பிசிசிஐ சலுகைகள்

இந்திய கிரிக்கெட் லீக்கிலிருந்து விலகிவிட்டதாக கபில்தேவ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் அவர்கள் கபில்தேவ் அவர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து சமரசம் ஏற்பட்டது. கபில்தேவ் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பிசிசிஐ ஜூலை 25ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து ஐபிஎல் போட்டியின்போது முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்படும் பணப்பரிசுத் தொகை கபில்தேவுக்கு வழங்கப்படும். 100 டெஸ்ட் போட்டிகளுக்குமேல் விளையாடி இருப்பதால் அவருக்கு 1.5 கோடி (சிறப்பு ஊக்கத் தொகை) அளிக்கவும்,கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாதாந்திர உதவித்தொகை 35 ஆயிரம் மீண்டும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. (2007ல் பிசிசிஐ-உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பை தொடங்கினார் கபில். இதன் பிறகே பிசிசிஐ ஐபிஎல் 2008ல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது).

மகசேசே விருது 2012

2012ஆம் ஆண்டிற்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான மகசேசே விருது (பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் விருது) ஜூலை 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த குழந்தை பிரான்சிஸ் (65) அவர்கள் இடம் பெற்றுள்ளார். இவர் கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சிறுதொழில் மூலம் வேலைவாய்ப்பு அளித்து அவர்கள் மேம்பாட்டுக்கு உழைத்து வருவதற்காக இவ்விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் -
சென் ஷு சூ (தைவான்), ரோமுலோ டாவிடே (பிலிப்பைன்ஸ்), ஸ்யோடா ரிஸ்வானா ஹசன் (வங்கதேசம்), யாங் செய்ங் கோமா (கம்போடியா), அம்ப்ரோஷியஸ் ருவிண்ட்ரிஜார்டோ (இந்தோனேஷியா).

இந்திய பெண்மணிக்கு அமெரிக்க தேசிய கவுன்சில் உறுப்பினர் பதவி

அமெரிக்கவாழ் இந்திய பெண்மணி ராணி ராமசாமி (தமிழகத்தை சேர்ந்தவர்) அவர்கள் உட்பட 6 பேரை தேசிய கவுன்சில் உறுப்பினராக அதிபர் ஒபாமா அவர்கள் நியமித்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பிரச்சனைகளை எதிர்கொள்ள இவர்கள் உறுதுணையாக இருப்பார் என்று ஒபாமா அவர்கள் கூறினார்.

உலக அளவில் வெள்ளி உற்பத்தி - மெக்சிகோ முதலிடம்

2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி மதிப்புமிகு உலோகங்கள் இடம்பெற்றுள்ள வெள்ளி உற்பத்தியில் உலக அளவில் 15.28 கோடி அவுன்ஸ் (ஒரு அவுன்ஸ் - 28.35 கிராம்) உற்பத்தியுடன் மெக்சிகோ முதலிடம் பிடித்துள்ளது. பெரு (10.98 கோடி அவுன்ஸ்), சீனா (10.39 கோடி அவுன்ஸ்), ஆஸ்திரேலியா (5.52 கோடி அவுன்ஸ்), சிலி (4.21 கோடி அவுன்ஸ்), போலந்து (4.8 கோடி அவுன்ஸ்), ரஷ்யா (4.0 கோடி அவுன்ஸ்), பொலிவியா (3.90 கோடி அவுன்ஸ்), அமெரிக்கா (3.60 கோடி அவுன்ஸ்), அர்ஜென்டினா (2.26 கோடி அவுன்ஸ்) ஆகிய நாடுகள் வெள்ளி உற்பத்தியில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பெய்ஜிங்கில் 60 ஆண்டுகளில் இல்லாத கன மழை - 77 பேர் பலி

சீனாவில் ஒரு வாரம் பெய்த கன மழைக்கு 77 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் ஜூலை 25ஆம் தேதி 21 செ.மீ. மழையும், ஜூலை 26ஆம் தேதி 11 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மழை என்று சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் பிராட்பேண்ட் 100 மடங்கு வேகம் அதிகரிப்பு கூகுள் அறிமுகம்
கற்பனைக்கும் எட்டாத வேகத்தில் வீடியோ மற்றும் படங்கள் பிரவுஸ் ஆகக் கூடிய "பைபர்" என்ற இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நொடிக்கு 1 ஜிகாபைட் வேகத்தில் இணையதளங்களை பார்க்க முடியும். அமெரிக்காவின் மிசவுரி மாநிலம் கன்சாஸ் நகரில் இந்த சேவை முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்படும் இன்டர்நெட் பிராட்பேண்ட் வேகத்தைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் செயல்படக்கூடியது. (ஜூலை 27)

நைஜீரியாவில் 2 இந்தியர்களை கொன்ற தீவிரவாதிகள் கைது

நைஜீரியாவில் போர்னோ மாநிலத்தின் மைடுகுரி என்ற பகுதியில் சங்கர் சாகா (35), போகுல் சந்தர் மோலண்டல் என்ற இரு இந்தியர்களை ஜூலை 25ஆம் தேதி கொடூரமாக கொலை செய்தனர். இவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட அந்நாட்டு சிறப்பு புலனாய்வு படைக்கு வந்த தகவல்படி மைடுகுரியில் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் 26 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஜூலை 28)

அசாம் மாநில மக்களின் மறுவாழ்விற்கு
300 கோடி ஒதுக்கீடு
அசாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜூலை 28ஆம் தேதி பார்வையிட்ட பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், மக்களின் மறுவாழ்விற்கு  300 கோடி மதிப்பிலான உதவிகளை அறிவித்தார். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 100 கோடி வழங்கப்படும் என்றும், கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு  50 ஆயிரம் அளிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழக்கதிர்பூர் கிராமத்தில் உள்ள 75 ஏக்கர் அரசு நிலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடான  83.83 கோடியில் 9 சதவீதம் தொகையான 7 கோடியே 54 லட்சம் மானியமாக தமிழக அரசு வழங்கும் என்றும், 14 கோடி மதிப்பீட்டில் 75 ஏக்கர் அரசு நிலத்தை வழங்குதவற்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு ஜூலை 28ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணி (டன்னல் போரிங் - இயந்திரத்தை கொண்டு சுரங்கம் தோண்டுதல்) நேரு பூங்காவில் ஜூலை 28ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் திட்டத் தலைவர் சுதீர் கிருஷ்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவில் 23 கி.மீ. நீளம் கொண்ட முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை - அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை வரை சுரங்க வழித்தடமாக அமைகிறது. 22 கி.மீ. உள்ள 2வது வழித்தடத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சாலை முதல் அண்ணா நகர் 2வது அவென்யூ வரை சுரங்க வழித்தடமாக அமையவுள்ளது. மீதமுள்ள பகுதிகளை உயர்த்தப்பட்ட வழித்தடமாக அமைக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டன் வாழ் இந்தியருக்கு விருது

பிரிட்டன் வாழ் இந்தியர் ஹலித் ஹமீது-க்கு மருத்துவத் துறையில் சிறந்த பணிபுரிந்தமைக்காக லண்டன் நகர சுதந்திர விருது அளிக்கப்பட்டுள்ளது. லண்டன் நகர மக்களின் வாழ்க்கைக்காக சிறந்த சேவையாற்றி வருவதற்காக இவ்விருது லண்டன் நகர அரசு வழங்கி கௌரவிப்பதாக அறிவித்துள்ளது. (ஜூலை 29)

வண்டலூர் உயிரியல் பூங்கா - வயது 28

வண்டலூர் உயிரியல் பூங்கா நாட்டிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 1855ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மாசுபட்ட காற்று, இட நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் இந்த பூங்க வண்டலூர் காப்புக் காட்டில் 602 எக்டேர் பரப்பளவில் 7.3 கோடி ரூபாய் செலவில் மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டு முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இதனை அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். இப்பூங்கா தொடங்கி 28 ஆண்டுகள் ஆகிறது. இது தெற்காசியாவின் மிகப் பெரிய பூங்காவாகும்.

ஆப்கனில் சாக் மாகாண கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சாக் மாகாணத்தின் கவர்னர் முகமது இஸ்மாயில் வாபா அவர்கள் ஜூலை 29ஆம் தேதி அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்து தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் கொல்லப்பட்டார்.

உலக அளவில் ஏற்றுமதி வளர்ச்சி - இந்தியா முதலிடம்

உலகில் பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளில் ஒன்றான இந்தியா 2011ல் 16.1 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி கண்டு உலக அளவில் முதலிடத்தை பிடித்தது. 2வது இடத்தில் 9.3 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியுடன் சீனா உள்ளது. 2010ல் 28.4 சதவீதத்துடன் சீனா முதலிடத்திலும், 22 சதவீதத்துடன் இந்தியா 2வது இடத்திலும் இருந்தது. இது குறித்த செய்தி உலக வர்த்தக மையத்தின் 2012ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post
Next Post

0 Comments: