Friday, October 12, 2012

2012- சமீப நிகழ்வுகள் - ஜூலை 29 முதல் 31 வரை




மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை சோதனை ஒடிஷா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜூலை 29ஆம் தேதி ஏவப்பட்டது. இது 290 கி.மீ. இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் சரியான இலக்கை வெற்றிகரமாக தாக்கியது என் சோதனை மைய இயக்குநர் பிரசாத் அவர்கள் தெரிவித்தார்.

சர்வதேச தரத்தில் நவீன நீச்சல்குளம்

நாமக்கல், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் சர்வதேச தரத்தில் நவீன நீச்சல் குளம் அமைக்க தலா   1 கோடி வீதம் மொத்தம் 2 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார் (ஜூலை 29).

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து - 32 பேர் பலி

டெல்லியிலிருந்து ஜூலை 28ஆம் தேதி இரவு 10.35 மணிக்கு சென்னையை நோக்கி புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில்வே ஸ்டேஷனை தாண்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் போது திடீரென எஸ்.11 பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தால் ரயில் நிறுத்தப்பட்டது. அதிகாலை என்பதால் அதிகமானோர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் புகை உணர்வை அறிந்த சிலர் உடனடியாக குதித்தனர். ஒரு சிலர் வழி தெரியாமல் புகை மற்றும் அதிக வெப்பம் காரணமாக தப்பிக்க வழியின்றி உடல் கருகி 32 பேர் உயிரிழந்தனர். 26 பேர் தீக்காயம் அடைந்தனர்.

அலெபோ நகரிலிருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்

சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத்திற்கு ஆதரவாக ராணுவம் மற்றும் அதிபருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கிடையே நடைபெற்ற பயங்கர மோதலால் வர்த்தக நகரான அலெபோ-விலிருந்து 2 லட்சம் பேர் (மொத்தம் 30 லட்சம் மக்கள்தொகை கொண்டது) பக்கத்து நகரங்களை நோக்கி சென்றுவிட்டனர். பள்ளிகள், வெட்டவெளிகளில் தங்கியுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரி கிராண்ட் பிரீ பார்முலா 1 - 11வது சுற்று
ஹங்கேரி கிராண்ட் பிரீ பார்முலா 1 கார்பந்தயம் (இந்த சீசனின் 11வது சுற்று) ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் மெக்லாரென் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இதுவரை முடிந்துள்ள 11 சுற்றுகளின் முடிவில் பெராரி அணி வீரர் பெர்னாண்டோ அவான்சோ 164 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரெட்புல் ரெனால்ட் அணி வீரர் மார்க்வெப்பர் 124 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். (இன்னும் இந்த சீசனில் 9 சுற்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.)

7 மாநிலங்களில் 15 மணி நேர மின்வெட்டு

வடக்கு மண்டல தொகுப்பில் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஏற்பட்ட மின்தடை 15 மணி நேரத்திற்கு பிறகே மின்தடை நீங்கியது. இதனால் 7 மாநிலங்களில் (உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தராஞ்சல், இமாச்சலப் பிரதேசம்) இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரயில் சேவை 25 சதவீத ரயில் சேவை மட்டுமே நடைபெற்றது. ஆக்ரா அருகே மின் உற்பத்தி யூனிட்டில் ஏற்பட்ட பழுதே வடக்கு மண்டல தொகுப்பில் மின்தடை முடங்கியதற்கு காரணம் என செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐடி துறைகளில் ஆராய்ச்சி, வளர்ச்சி மையங்களுக்கான வரி விதிப்பை சீரமைக்க குழுவை அமைத்தார் பிரதமர்

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) மற்றும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி, வளர்ச்சி மையங்களுக்கான வரி விதிப்பை சீரமைக்க மத்திய நேரடி வரிவிதிப்பு (சிபிடீடி) வாரியத் தலைவர் என். ரங்காச்சாரி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் நியமித்துள்ளார். இக்குழு வளர்ச்சி மையங்கள் மீதான வரி விதிப்புகளில் உள்ள குழப்பங்களை ஆய்வு செய்து ஆக. 31ஆம் தேதிக்குள் முதல் அறிக்கையை அளிக்கும் என்றும், முழு விதிமுறைகளும் டிச. 31க்குள் தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதம அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (வரி ஏய்ப்பதை தடுப்பதற்காக பொது வரி ஏய்ப்பு தடுப்பு (ஜிஏஏஆர்) விதிகளை ஆய்வு செய்ய பார்த்தசாரதி ஷோம் அவர்கள் தலைமையிலான ஒரு குழுவை பிரதமர் ஏற்கெனவே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது).

மணிலாவில் சபோலா புயல்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சபோலா என பெயரிடப்பட்டுள்ள சூறாவளிப் புயலுக்கு 10 பேர் பலியாயினர். 6 பேரை காணவில்லை. 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். டொர்னடோ எனப்படும் புழுதிப் புயலைப் போல சூறைக்காற்று வீசியதில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தன. மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயல் தைவான் கடல் பகுதியை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மணிலாவில் மொத்தம் 20 புயல்கள் தாக்கும் என்றும், தற்போது தாக்கியுள்ள புயல்7வது புயல் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். (சபோலா என்பது வியட்நாம், லாவோஸ் பகுதியில் காணப்படும் அரிய வகை பாலூட்டியாகும்).

அலகாபாத் வங்கி நிகர லாபம் அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் (2012-13) முதல் காலாண்டில் அரசுத் துறை வங்கியான அலகாபாத் வங்கியின் நிகர லாபம் 514 கோடி என்றும் இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.பி. துவா அவர்கள் தெரிவித்துள்ளார். (ஜூலை 30)

சிண்டிகேட் வங்கி நிகர லாபம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் (2012-13) முதல் காலாண்டில் சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம் 440 கோடி என்றும் இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 28.28 சதவீதம் அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மதுகாந்த் கிரிதார்லால் சங்வி அவர்கள் தெரிவித்துள்ளார். (ஜூலை 30)

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களுக்கு நிதித்துறையும், மத்திய மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அவர்களுக்கு உள்துறையும், மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்களுக்கு கூடுதலாக மின்துறையும் ஒதுக்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஜூலை 31)

இந்தியாவில் 20 மாநிலங்களில் ஒரே நேரத்தில் மின்தடை

வடக்கு மண்டலம் (பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்), கிழக்கு மண்டலம் (மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிஷா, சிக்கிம்), வடகிழக்கு மண்டலம் (அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா) என 3 மின்தொகுப்புகள் மூலம் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த 3 மின்தொகுப்புகளும் ஜூலை 31ஆம் தேதி மதியம் 1 மணிக்கு திடீரென ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் 20 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ரயில் சேவை, போக்குவரத்து மற்றும் 60 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதுபோன்ற ஒரு பெரிய மின்தடை இதுவரை ஏற்பட்டதில்லை என்றும், இதுவே உலகின் மிகப் பெரிய மின்தடை என்று செய்திகள் கூறுகின்றன (15 மணி நேரத்திற்கு பின்பே மின்தடை சீரானது).

மின்தொகுப்புகள் குறித்த தகவல்கள் -
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்கள் தேவைக்கு ஏற்ப பிரித்து அளிக்கப்படுகிறது. இதற்காக வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு என 5 மின் தொகுப்புகள் (பவர் கிரிட்) உள்ளன. இவற்றில் தென்மண்டல தொகுப்பை தவிர மற்ற தொகுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. தென்மண்டல தொகுப்பில் இருந்துதான் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்டவற்றிற்கு மின்சாரம் கிடைக்கின்றது. 5 மின் தொகுப்புகளையும் மத்திய அரசுக்கு சொந்தமான "பவர்கிரிட் கார்ப்பரேஷன்"   இயக்குகிறது. இந்த தொகுப்புகள் மூலம் நாடு முழுவதும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை பெறும் மின் தொகுப்புகள் அவற்றை தேவைக்கேற்ப எல்லா இடங்களுக்கும் சப்ளை செய்கின்றன. சப்ளை-தேவை இடையே சமநிலை பின்பற்றப்பட்டால் மட்டுமே இந்த மின்தொகுப்புகள் சீராக இயங்கும். அப்படி இல்லாமல் ஏதாவதொரு மாநிலம் அதிக மின்சாரத்தை எடுத்தால் அந்த மின்தொகுப்பு முடங்கிவிடும். தற்போது மின்தொகுப்பு முடங்கியதற்கு காரணம் உ.பி. தனக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2.60 கோடி யூனிட் கூடுதலாக பயன்படுத்தியது, அரியானாவில் 1.3 கோடி யூனிட், பஞ்சாப் 52 லட்சம் யூனிட் என கூடுதலாக எடுத்துக் கொண்டதே இதற்கு காரணம்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தர் நியமனம்

அண்ணா பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தராக அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி டீன் காளிராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கார்ப்பரேஷன் வங்கி நிகர லாபம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் (2012-13) முதல் காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 5.35 சதவீதம் அதிகம் என வங்கியின் தலைவர் அஜய் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லாபம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் (2012-13) முதல் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லாபம் 233.44 கோடி என வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம். நரேந்திரா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காலாண்டு நிதிக்கொள்ளை - ஆர்பிஐ வெளியீடு

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 2012-13ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் ஆர்பிஐ கவர்னர் டாக்டர் டி. சுப்பாராவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (துணை கவர்னர்கள் - டாக்டர் கே.சி. சக்கரபர்த்தி, திரு. ஆனந்த் சின்ஹா, டாக்டர் சுபிர் கோகர்ன், திரு. எச்.ஆர். கான்). கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் குறுகிய கால கடன் வட்டி (ரெப்போ) 8 சதவீதம் நீடிக்கும். ஆர்பிஐ-யிடம் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பு (சிஆர்ஆர்) 4.75 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைப்பு. யூரோ கரன்சி நாடுகள் நிதிநிலைமை தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி இடையே வர்த்தக பற்றாகுறை தொடர்ந்து பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆபத்தாக உள்ளது. நிதி புழக்கத்தை அதிகரிக்க ஓபன் மார்க்கெட் வர்த்தகம் தொடர வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அறிவித்தது. (ஜூலை 31).

சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி - ஜெர்மனி உலக சாதனை

சூரிய சக்தி மூலம் ஒரு மணி நேரத்தில் 22 ஜிகா வாட் மின்சாரம் (1 ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட்) உற்பத்தி செய்து ஜெர்மனி உலக சாதனை படைத்துள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் மையத்தின் தலைவர் நார்பர்ட் அல்நோச் அவர்கள் தெரிவித்துள்ளார். (ஜூலை 31)

புனேயில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் புனேயில் உள்ள தியேட்டரில் ஆக. 1ஆம் தேதி நடைபெற இருந்த விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார். கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்வது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் புனேயில் பால்கந்தர்வா தியேட்டர் வெளியே உள்ள சிலை அருகே ஒரு குண்டும், வங்கி, மெக்டொனால்டு கடை, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
Previous Post
Next Post

0 Comments: